tblarasiyalnews_31343805790புதுக்கோட்டை: “தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து, பரிசீலனை செய்யப்படும்’ என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், சுகாதாரத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திட்டம், அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 16 லட்சத்து 98 ஆயிரம் குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.

இலவச ஆம்புலன்ஸ் -108 சேவையும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை, 1,223 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 பேர் மட்டுமே, தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.காலிப் பணியிடங்களை நிரப்பும் விதமாக, தனிப்பயிற்சி பெற்ற டாக்டர்கள் உட்பட, 28 ஆயிரத்து 468 மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் டாக்டர்கள், பணிநேரத்தின் பெரும் பகுதியை தனியார் மருத்துவமனைகளில் செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கேரளாவைப் போன்று, தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடைவிதிக்க பரிசீலனை செய்யப்படுகிறது.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.