சிறுமி மானபங்கம்: முன்னாள் டி.ஜி.பி., க்கு கத்திக்குத்து : கோர்ட்டில் பரபரப்பு
சண்டிகார்: அரியானா முன்னாள் டி. ஜி.பி.,ரத்தோருக்கு சண்டிகார் கோர்ட்டில் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரது தாடை கிழிந்தது. இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர்; இளம் டென்னிஸ் வீராங்கனை ருச்சிகாவை மானபங்கப்படுத்தியதாக குற்றச்சாட்டு. மானபங்கம் செய்ததால், அவமானம் தாங்காமல், ருச்சிகா, மூன்றாண்டுகளுக்கு பின், தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில், சமீபத்தில் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதாது என பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், இவர் மீது புதிதாக சில வழக்குகளை அரியானா போலீசார் தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி, சண்டிகார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ரத்தோர். மேலும் சில வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் வழக்கு தொடரப்ப்பட்டுள்ளது. இந்த மனுமீதான விசாரணை இன்று ( திங்கட்கிழமை ) நடக்கவிருந்தது. இந்த விசாரணைக்காக கோர்ட்டுக்கு காரில் இருந்து இறங்கி கோர்ட் அணிந்தபடி ரத்தோர் வந்துகொண்டிருந்தார். இந்நேரத்தில் பாய்ந்து வந்த ஒரு இளைஞன் இவரது முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். பின்னர் கையில் இருந்த கத்தியால் தாடையை குத்தி கிழித்தான். இதனால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இளைஞர் கைது : கத்தியால் குத்தியதும் தாடையில் இருந்து ரத்தம் சொட்ட, சொட்ட கையில் இருந்த கர்ச்சிப்பை கொண்டு துடைத்தபடி காரில் ஏறி அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து ரத்தோரை குத்தியவர்களை அருகில் இருந்த போலீசார் மற்றும் சிலர் சேர்ந்து இந்த இளைஞரை பிடித்து கொண்டு சென்றனர். அப்போதும் அவர் ரத்தோருக்கு எதிராக கோஷம் எழுப்பினான்.
Monday 08 Feb 2010 | மற்றவை